April 26, 2024
tamil katturai APJ arul

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை

சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை- ஏபிஜெ அருள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பம் கணவர் மகள்களுடன் ஒரு நாள் மாலைப் பொழுது சைவ உணவுகத்திற்கு சென்றிருந்தேன். உணவுக்கு ஆர்டர் பண்ணிவிட்டு உட்கார்ந்திருந்தோம்.ஹோட்டல் சுவர்களில் மகான் ஒருவரின் பெரிய சைஸ் படங்கள் பல  மாட்டப்பட்டிருந்தது. அன்பு பார்வை,எளிய தோற்றம், பசு மாட்டை இரக்கத்தோடு தடவி கொடுக்கும் படம் என பலபடங்கள். இதை கண்ட எனது இளைய மகள் (3 வது வகுப்பு சிறுமி), சுவரில் மாட்டிய படத்தை காண்பித்து, டாடி இந்த படங்களில் இருப்பது யாரு?எனக் கேட்டாள். 

இவர் பெரிய மகான் என்றேன்.

மகான்னா?என்றாள்.

 அவளுக்கு புரிவதற்காக,

 இரக்கமுள்ள பாசமுள்ள சாமி தாத்தா, என்றேன். படத்த பாரு, அந்த மகான் தாத்தாவிடம் மாடு எவ்வளவு அன்பா நிக்குது என்றேன்.

கொஞ்ச நேரம் எல்லா போட்டோவையும் பார்த்தாள். ஒரு போட்டோவை மட்டும் ரொம்ப நேரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆர்டர் பண்ணின டிபன் வகைகள் வரத் தொடங்கின. 

   எப்பொழுதும் முதலில் ஆவலுடன் சாப்பிட ஆரம்பிப்பவள் அன்று அவள் முன்பு அவளுக்கு பிடித்த நெய் ரோஸ்ட் வைத்தப் பிறகும், அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து நான்; சாப்பிடு, என்றுச் சொல்லி விட்டு, நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். சத்தமாக; ‘டாடி’, என்றழைத்து, ‘இது நல்ல தாத்தா இல்லை , ஆய் தாத்தா என்றாள்.’ 

உடனே நான்; அப்படி சொல்லக் கூடாது. சாப்பிடு என்று அதட்டினேன். 

உடனே அவள்;

 டாடி, இது நல்ல தாத்தா இல்லை என்று மீண்டும் கத்தி சொன்னாள். சுற்றியிருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்ததை கண்ட என் கணவர், சுதாரித்து, அவள் அருகில் அமர்ந்து, சரி சாப்பிடு , என்று தோசையை பிட்டு வாயில் கொடுத்தார். எதுக்கு அப்படி சொன்ன? அப்பாவுக்கு புரியலை. இப்ப மெதுவா சொல்லு அப்பா கேட்கிறேன் என்றார். அவள் சொன்ன பதிலால் நாங்கள் அதிர்ந்தோம். நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளக்கம் எனக்கு கிடைத்தது போலிருந்தது.

       அவள் சொன்னது; 

டாடி..டாடி ..அந்த தாத்தா புலி தோல் மீது    உட்கார்ந்திருக்காங்க. புலி தோல் எப்படி இந்த தாத்தாவுக்கு கிடைச்சுது. புலியை கொல்லக்கூடாதுல டாடி. பாவமில்ல. ?

புலி தோல உரிக்கும் போது அது அழுதிருக்குமில்ல …..எனச் சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியதை நாங்கள் கண்டோம். உடனே,

நான்; சரி..சரி அப்படியெல்லாம் இல்லை. செத்த புலியிடமிருந்து தான் எடுப்பாங்க பேசாம சாப்பிடு என்றாள்.

அப்படியா டாடி…இருந்தாலும் எனக்கு இந்த தாத்தா பிடிக்கல…புலி கண்ணைப் பாருங்க அது இன்னும் சாகல….. என்றாள். உடனே எனது பெரிய பெண் குறிக்கிட்டு;  நீ சொல்றதது கரக்ட். புலி தோலை உரிக்கறது பாவம். இந்த தாத்தா தோல் மேல் உட்காரக் கூடாது.சரியா? என்றவுடன் சமாதானம் ஆனாள்.

அன்பர்களே!

கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் கருணை விருத்தியாகமல் தடை செய்வது சாதி சமய ஆசாரங்களே என்கிறார் லள்ளலார். நிற்க!

 சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை? 

மேலே சிறுமி சுட்டிக் காட்டிய புலித்தோல் மீது அமரச்சொல்லும் கட்டுப்பாடே அந்த சமயத்தின் கட்டுப்பாடு ஆகும். ஆம், அந்த உணவகத்தில் இருந்த அந்த மகான் உண்மையில் உயிர்களிடத்தில் அன்பு இரக்கம் கொண்டவரே. ஆனால், இறைவனை நோக்கி தவம் செய்ய அவர் நம்பிக்கை கொண்டிருந்த சமயத்தின் வழக்கம் கட்டுப்பாடு தோலின் மீது அமர்ந்து, தவத்தால் உடலை சூடேற்றி, உள்ளத்தில் ஒளி காண்பதே பயிற்சி.

நிற்க! மற்ற உயிர்களின் தோலை உபயோகப்படுத்துவது எங்ஙனம் உண்மை இரக்கம் ஆகும்? தோலுக்காக உயிர்கள் வேட்டையாடி கொல்லப்படுகிறது.  அப்படியே அவை இறந்த பிறகே எடுப்பதாக வைத்துக் கொண்டாலும், இறந்த அந்த விலஙகின் தோல் உரிப்பது,அதன் பல்லை எடுப்பது, எங்ஙனம் அவைகளை “தம் உயிர் போல் பாவித்தல் வேண்டும்”  என்ற சைவநெறிக்கு ஏற்புடையது ஆகும்? 

இதை போல் பல சடங்குகள் எல்லா சாதி சமயங்களிலும் உள்ளது. 

# மற்ற உயிர்களை வணங்கும் தெய்வங்களுக்கு பலி கொடுத்தல்.

# கடினமாக நம்மை வருத்திக் கொண்டு விரதம்,கடின தவம், மூச்சு பயிற்சியில் இருத்தல். 

# வேண்டுதல் பெயரில் நம் உடம்பில் ஆயுதங்களால் புண்ணாக்கி கொள்ளுதல்.

# தவத்திற்கு யாகத்திற்கு இரத்தம்,தோல், மாமிசத்திற்கு மற்ற உயிர்களை கொல்லுதல்.

# கல்லால், சவுக்கால் அடித்தல் அடித்துக் கொள்ளுதல்.

# உடன்கட்டை, தாசியாக்குதல், தீண்டாமை, தீட்டு ஆதல், மற்றவர்களை விரோதியாக்குதல், தண்டனை, போர், அடிமையாக்குதல்.

இவை நம் சாதி சமயத்தில் செய்ய வைக்கும் சடங்குகள், இவைக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். காரணம் அந்தந்த சாதி சமய தலைவர்கள் அனுமதிக்கும், மற்றும் அவைகளின் புனித நூல்களில் உள்ளது. யாரும் மறுக்க முடியாது.மீற முடியாது.

நிற்க! இந்த பழக்க வழக்கம் நம்மிடம் இயற்கையாக இருக்கும் கருணையை விருத்தியாக்குமா? சொல்லுங்கள். 

# எவ்வளவு இரக்கம் நம்மால் பெற்று வைத்திருந்தாலும் நம் சாதி பொதுநோக்கத்தை தருமா? 

# நம் சமய சடங்குகள் மற்ற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருக்கிறதா?

# நமது நல்ல விசாரணையில் வெளிப்படும் புதிய தனி உண்மைகளுக்கு நாம் சார்ந்துள்ள சமயமதம் இடம் தருமா?

சிந்திப்போம். புதிய தனி பொது உண்மை வழி காண்போம்.

நம் கருணையை விருத்தியாகாமல் செய்யும் இந்த சாதி சமயத்தை கைவிடுவோம்.

உண்மை கடவுளை உண்மை அன்பால் கண்டு அருள் பெற வைக்கும் சுத்த சன்மார்க்கத்தை சாருவோம். 

—-அன்புடன் ஏபிஜெ அருள்

 

unmai

Channai,Tamilnadu,India