July 18, 2026
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள் நான்கில் ஒன்று “ மலங்கள் 5-ம் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.” ஆகும்

சமயங்களில் குறிப்பிடும் மலங்களின் எண்ணிக்கை மூன்று. சைவ சமயத்தின் படி; சொல்லும் மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை என மூன்று மலங்கள்.

சீவக சிந்தாமணி படி ; ஆணவம், மாயேயம், திரோதனம் என மூன்று

சுத்த சன்மார்க்கத்தின் படி ; 5 மலங்கள் சொல்கிறார் வள்ளலார்.

ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, திரோதனம்

இதுவே இன்றைய விசாரம்.

பொதுவாக மலம் என்றாலே அஞ்ஞானம், அறியாமை.

இறைவனின் உண்மை நிலையை அல்லது இயற்கையின் திறங்களை மனிதன் முழுமையாக தெரிந்துக் கொள்ளாது வைக்கும் அஞ்ஞான மற்றும் அறியாமை செயல்களை குறிப்பது மலங்கள் எனலாம்.

முதலில் ; ஆணவம்.

ஆணவம் என்பது; செருக்கு, அகங்காரம், நான் என்னும் அபிமானம் எனலாம். மேற்படி ஆணவம் இருந்தால், உண்மையை தெரிந்துக் கொள்ள முடியாது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஒளவையார் கூற்றை நாம் கருத்தில் கொண்டு உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு பணிந்து இருக்க வேண்டும்.

ஆணவ மலம் இருள் என அழைக்கப்படுகிறது.

அடுத்து;

கன்மம்; கன்மம் என்றால் செயல் என்று பொருள்.

நம் செயலால் ஏற்படுகின்ற வினையை அதாவது விளைவை குறிக்கிறது. ஒருவரின் தீய செயலால் ஏற்படுகின்ற துன்பத்தால் அவன் உண்மை குறித்த விசாரம் தடைப்படும்.

அடுத்து; மாயை:

மாயை என்றால்; பொய் தோற்றங்களை நம்பி கெடுதல்; உலகப் போகங்களில் லயித்து துன்பங்கள் வந்து சேருதல், நிலையின்மையில் நம்பிக்கை வைத்து வீண் போதல், மேலும் கற்பனைகள் எல்லாம் மாயை ஆகும்.

இவை உண்மை குறித்து தெரிந்துக் கொள்ள உதவும் அறிவு விருத்திக்கு தடையாக அமைகின்றன.

அடுத்து; மாமாயை மலம்;

மாயை எவை எனக் கண்டோம். மாமாயை என்ற பெரிய மாயைகள் எனப்படும். மாமாயைகள் எனச் சிலவற்றை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் இறையொளியை, கருணையால், நம்முள், சத்திய அறிவினில், கண்டு களிக்கும் ஓர் உண்மை வழியை அருளால் நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த உண்மை அறிவு வழி தெரிந்துக் கொள்ளாது மாமாயையால் தத்துவ சித்தி விகற்பங்களில் மற்றும் கற்பனைகளில் இருப்பதே மாமாயை என்கிறார் வள்ளலார்.

ஆனால்,

இந்த உண்மையை கருத்தில் கொள்ளாமல் பல்வேறு சமயங்களில், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி கற்பனைகள் என்றும், அவ்வச் சமயங்க்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்று உள்ளபடியே அறியாமல் அதில் நம்பிக்கை வைப்பது கூடாது என்கிறார் வள்ளலார்.

அடுத்து; திரோதனை மலம்;

அண்டங்கள் உலகங்கள் உயிர்கள் பொருள்கள் மற்றவைகள் தோற்றுவித்தும் விளக்கம் செய்வித்தும் துரிசு நீக்குவித்தும் பலன் தருவித்தும் விளங்கும் அருள் நிலையை அறியா வண்ணம் மறைக்கும் திரைகள் திரோதை சக்திகள் உள்ளன.

மறைக்கும் திரைகளை அறிவு விசாரத்தால், ஆண்டவரிடத்து அன்பு வைப்பதால் பெறப்படும் அருளால் திரைகளை நீக்கிக் கொள்ளலாம்.

ஆக, மலங்கள் என்றால் அஞ்ஞானம் அல்லது அறியாமை ஆகும். இதை நீக்க வேண்டுமானால் உண்மை அறிவை பெற வேண்டும். அறிவொளி உண்டானால் இருள் மலங்கள் ஒழியும். சரிதானே.

ஆனால் மக்களோ, சமய மத மார்க்கங்களில் உபாய வகைகளை நம்புவதால், கன்மம் வினை இவைக்கு பயந்தும், மாமாயைக்கு கட்டுப்பட்டும் உள்ளனர். உருவாக்கப்பட்ட  சாதி மற்றும் சமய ஆசார கட்டுபாட்டுகளில் வீழ்ந்து, சடங்குகளில், கற்பனைகளில் வீண் போகின்றார்கள் என்கின்றார் வள்ளலார். 

ஆக,

ஆணவமாகிய நான் என்னும் செருக்கு இல்லாமல், பணிந்து நிற்றல்,

கன்மம் ஆகிய தீய செயல்கள் செய்யாது, ஒழுக்கம் நிரப்புதல்,

மாயையாகிய பொய் தோற்றம் மற்றும் நிலையற்ற உலக போகங்களில் லட்சியம் வையாது, உண்மையை விரும்புதல்,

மாமாயையாகிய சாதி சமய மதங்கள் வேத ஆகமம் புராணக்கலைகள் இவற்றில் எதனிலும் லட்சியம் வையாது, சத்திய அறிவை பெற்று பொது நோக்கம் வருவித்துக் கொள்ளல்,

திரோதையாகிய திரைகளை கருணை நன்முயற்சியால் விலக்கிக் கொண்டு, இறை சொரூபத்தை உள்ளத்தில் கண்டு நித்திய பேரின்ப வாழ்வை பெறுதல்.

5 – மலங்களை நம் நன்முயற்சி மற்றும் இறை அருளால் நீக்கிக் கொண்டு, உண்மையை அகத்தில் அறிவைக் கொண்டு அறியச் சொல்லும் சுத்த சன்மார்க்கம் சாருவோம். நன்றி வணக்கம். அருள்.

Karunai Sabai-Salai

34, Poombuhar Nagar North Extn.,

Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

unmai

Channai,Tamilnadu,India