கட்டுரை 2 :
வள்ளலார் சனாதனத்தின் உச்சமில்லை. சனாதன தருமங்களை (ஆசாரங்களை) விட்டொழிக்கச் சொன்னவரே வள்ளலார்.
கட்டுரை 2 :
வள்ளலார் சனாதனத்தின் உச்சமில்லை. சனாதன தருமங்களை (ஆசாரங்களை) விட்டொழிக்கச் சொன்னவரே வள்ளலார் – APJ அருள்
சனாதன தர்மத்தில் உள்ள தர்மம் என்பது ஆசாரங்கள் ஆகும். சனாதனம் என்பது என்றும் நிலைத்திருக்க வேண்டியது என்ற பொருள். ஆக, என்றும் அழியாது நிலைத்து நிற்க வைக்க வேண்டிய “ ஆசாரங்கள்” என்பது தான் “ சனாதன தருமத்தின் பொருள் ஆகும்.
தற்சமயம் சனாதன தர்ம நூலில் எல்லா மார்க்கங்களின் சில விசயங்களை பதிவு செய்திருந்தாலும், சனாதனத்தின் அடிப்படை நெறி வைதீக மதக் கோட்பாடே. இதன் புனித நூல் மனு தர்மம், ஸ்மிருதி, இராமாயணம் மகாபாரதப் புராணங்கள் இவைகளே. இதை சனாதனவாதிகள் மறுப்பதில்லை. ஆவணமும் இதை தான் காட்டுகிறது.
வள்ளலாரும் வேத சமயப்பற்றுள்ள காலத்தில் அதன் ஆசாரக் கட்டுப்பாட்டில் தர்மங்களை மிகவும் போற்றியுள்ளார். வேத நம்பிக்கையில் அவர் காட்டிய தருமங்கள் கீழ்வருமாறு; சீவ தர்மம், ஆசார தர்மம், ஆசிரம தர்மம், சாதி தர்மம், முதலியவாக தர்மங்கள் விரியும் என்கிறார். ஆன்மாவின் இயற்கை என்பதே தர்மத்திற்கு பொருள் என்பார். நிற்க!
ஆனால், அதன்பின்பு தனது மெய்ஞ்ஞான தவத்தில் மேற்படி ஆசார வகைககள்தான் நமது ஆன்மாவின் இயற்கை குணமாகிய கருணை விருத்திக்கு தடையாக உள்ளது என்ற உண்மையை காண்கிறார் வள்ளலார். அதன்பின்பு தான் பற்றிய பற்றுக்கள் அனைத்தையும் பற்றற கைவிட்டு விட்டு ஒரு புதிய பொது மார்க்கத்தை (வழியை) காண்கிறார் வள்ளலார்.
கடவுள் நிலை குறித்து சொல்லும் போது;
“…எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் எல்லா பொருள்களையும், மற்றை எல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும்,துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் …”
கடவுளின் அருளைப் பெற கருணை ஒன்றே சாதனம். அக்கருணை விருத்திக்கு தடையாக சாதி கட்டுப்பாட்டு ஆசாரங்களும் சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களும் உள்ளன. சாத்திர ஆசாரம் உட்பட பதிமூன்று ஆசார வகைகள் என பட்டியலிட்டு தந்துள்ளார் வள்ளலார். ஆகையால் மேற்படி ஆசாரங்கள் விட்டு ஒழித்து பொது நோக்கம் வருவித்து, கடவுளின் அருளை பெற வேண்டுமே அல்லது கூடாது.(முடியாது) என்கிறார் வள்ளலார்.
கடவுளால் வள்ளலாருக்கு அறிவிக்கப்பட்ட மரபுகள் நான்கு. அதில் ஒன்று சாகாக் கல்வியே கல்வி என்கிறார். ஆம், மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி கொண்டு, கடவுள் அருளால் இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு பேரின்ப பெருவாழ்வில் வாழ்தலே எனது அதி தீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது என்கிறார் வள்ளலார். …”
கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலார் தான் கீழ்வருமாறு சொல்கிறார்கள் (பக்கம்: 466 ல்):
“… நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்….” அதற்கான காரணங்களை விவரித்தும் சொல்லி உள்ளார்கள்.
மேலும் பக்கம் 468 ல்;
“ வேதாந்தம் .. முதலிய மதங்களில் லட்சியம் வேண்டாம்… “
பக்கம் 471 ல்;
“சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி என்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்ப வேண்டாம்…”
பக்கம் 418 ல்;
“தத்துவவொழுக்கம் பற்றி சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் ஒழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
அவையாவன;
ஜாதி ஆசாரம், குல ஆசாரம், அச்சிரம் ஆசாரம், லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரியா ஆசாரம்,சமய ஆசாரம்,மத ஆசாரம், மரபு ஆசாரம், கல ஆசாரம், சாதன ஆசாரம், அந்த ஆசாரம், சாஸ்திர ஆசாரம், முதலிய ஆசாரங்கள்.
ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய மெய் ஞான ஆசாரத்தை வழங்கிப் பொதுநோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி வல்லபங்களைப் பெற முடியும். இல்லாவிடில் முடியாது என்கிறார் வள்ளலார்.
30-01-1874 அன்று திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் சொல்லியது ;
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் (நெறி) இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்; இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை “ என்றார் வள்ளலார்.
முதல் விண்ணப்பத்தில்;
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப வி கற்பங்கங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப வி கற்பங்களும்,எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்..“
இரண்டாவது விண்ணப்பத்தில்;
“…அவ்வ சமயங்களில் பலப்பட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல் அடைசெய்வித்து அருளினீர் .. ஆண்டவரே!”
12 – 04 -1871 அறிவிப்பில்;
“… இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள்,கடவுளர், தேவர்,அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா கடவுளரும்,எல்லா தலைவர்களும், எல்லா கடவுளரும், எல்லா தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமை பெரும்பதி….”
பாடல் வரிகளில் ;
- “ நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே ..”
- “ மேல் வருணம் தோல்வருணம் கண்டறிவார் இல்லை நீ..”
- “ இயல் வேத ஆகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திர சாலங்கடையா உரைப்பார் …மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக..”
- “ தோன்றிய வேத ஆகமத்தை சாலம் என உரைத்தேம், உலகறி வேத ஆகமத்தை பொய் எனக் கண்டுனர்வாய் “
- வேத நெறி, ஆகமத்தின் நெறி, புராணங்கள் விளம்பும் நெறி, இதிகாசங்கள் விதித்த நெறி … முழுவதும் சூது
- மதங்கள் ஆசிரம வழக்கெலாம் குழிக் கொட்டி மண் மூடிப் போட்டு..
- சாத்திரக் குப்பை, சாத்திர சேறு என்கிறார் வள்ளலார்.
- புராணங்கள் இதிகாசங்கள் உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக.
- மதத்திலே மயங்கா மத்தியிலே விளைந்த மருந்தை…”
நிற்க ! வள்ளலார் போன்ற பல சித்தர்களும் வேத / வைதீக கொள்கையை அதன் ஆசாரங்களை மறுத்து, கடவுளின் உண்மையை உரைத்து இங்கு பல மார்க்கங்களை நிறுவியுள்ளனர். இவர்களின் கொள்கையானது உண்மை கடவுளின் நிலையை உலகிற்கு உரைத்து, கற்பனை மற்றும் சூது உடைய கொள்கையை அடையாளம் காட்டி உள்ளனர்.
இந்திய சட்டப்படி இவர்களும் “ இந்து “ என்ற பெயர்க்கு கீழ் தான் வருகிறார்கள். ஆக, இந்துவாகிய இத்தகைய மார்க்கங்களில் சனாதன ஆசாரமாகிய தர்மங்களை விட்டொழிக்கச் சொல்கிறது. சுத்த சன்மார்க்கத்தில்; கடவுளின் அருளை பெறுவதற்கு ஆசாரங்களை விட்டொழித்து, பொது நோக்கம் வருவித்து, கருணை மட்டுமே சாதனமாகக் கொண்டு, இடைவிடாது கடவுளை தொழுவதே வள்ளலாரின் கட்டளையாக உள்ளது.
சனாதன தர்மத்தை எதிர்ப்பது என்பது, ஒட்டு மொத்த இந்து மதத்தை எதிர்ப்பது என்ற வாதம் மிகவும் கீழ்தரமானது ஆகும். இந்து மதத்தில் பிரம்மம் மட்டுமல்ல பல நூறு கடவுள் கொள்கைகள் உள்ளது. ஒவ்வொரு கொள்கையும் தனி கடவுளையும், தனி வழிபாட்டு முறையையும், வேறுப்பட்ட ஆகமங்களையும் கொண்டுள்ளது. இவர்கள் எல்லோருமே இந்துக்கள் ஆவர் சட்டப்படி. இப்ப சொல்லுங்க வள்ளலார் சனாதனத்தின் உச்சமா? அவரவர் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் விட்டுவிடுகிறேன்.
— APJ அருள் –
YOUTUBE : http://www.youtube.com/@Godandgraceorg
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!