கட்டுரை 1 – APJ அருள் – சத்திய ஞான சபை விளக்கம் :
கட்டுரை 1 – APJ அருள் – சத்திய ஞான சபை விளக்கம் :
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார், அவர் கண்டு வெளிப்படுத்திய மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்”. இம்மார்க்கம் எந்தொரு சமய மத மார்க்கங்களை சாராது தனி நெறி கொண்டுள்ளது.
சுத்த சன்மார்க்கத்தின் அடையாளமாக உள்ளது இரண்டு.
ஒன்று; சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை,
இரண்டாவது; சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை.
இன்று நமது விசாரம் “சத்திய ஞான சபை” குறித்து.
அன்பர்களே, வள்ளலார் சைவ சமயம் உட்பட எல்லா பற்றுக்களையும் விட்டுவிட்டு, அவர் கண்ட புதிய வழியே, சமரச சுத்த சன்மார்க்கம் ஆகும். இங்கு சமரசம் என்பது குறித்த விளக்கம் மிக்க முக்கியம். இதை ஏற்கெனவே விசாரம் செய்துள்ளோம். அன்பர்களே!
ஒரு தமிழ்சொல்லுக்கான பொருள் பல உண்டு. இதுவே தமிழின் சிறப்பு. யானை என்ற சொல்லுக்கு சுமார் ஐம்பதுக்கு மேல் பொருள் உள்ளது. அந்தந்த இடத்துக்கான பொருளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்திய ஞான சபையின் கட்டிட அமைப்பு எண்கோணம். இதை குறிக்கும் எண் எட்டு. எட்டு என்பது தமிழ் எழுத்தில் “அ” ஆகும்.
சத்திய ஞான சபை எண் கோண வடிவம் ஆகும்.
எட்டை குறிக்கும் எழுத்து “அ”, அ என்றால் அக சுட்டு.
மேலும் எட்டு என்பது; நம் உயிரை/ஆன்மாவையும் குறிக்கும்,
எட்டு.. எட்டுதல்.. இதற்கான பொருள்; ஒன்றை அடைய நெருங்குதல், கிட்டுதல், அகப்படுதல், புலப்படுதல் ஆகும். மேலும், எட்டு என்றால் ஆசை.
வள்ளலாரிடம் ஒரு அதி தீவிர விருப்பம் ஏற்பட்டது. அதை நிறைவேற்றி தந்த வழிக்கு பெயர் தான் சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார். அந்த விருப்பம் எதுவெனில்; “நமக்கு ஏற்படுகின்ற அவத்தைகளை நீக்கிக் கொண்டு, எக்காலத்தும் எவ்விதத்தும் சாகாமல் வாழ்வது”.
மேலும், எண்குணத்தான் என்பது; கடவுளின் எட்டு குணங்கள் என்கிறது திருக்குறள்.
இங்கு சிறப்பு என்னவென்றால், மேலே சொல்லப்பட்ட எட்டுக்கான எல்லா அர்த்தங்களும் வடலூர் சத்திய ஞான சபைக்கு பொருந்தி வருகிறது. அதாவது;
- எண்கோண வடிவு.
- ஆசையை நிறைவேற்றி கொடுக்கும் வழி.
- எண்குணத்தான் கடவுள் வீற்றிருக்கும் இடம்.
- உண்மையை நெருங்குதல், புலப்படுதல்.
- மனிதனுக்கான (ஆன்மா அல்லது உயிர் அல்லது அறிவு அல்லது உளம்) கோயில்.
- உண்மையை செய்விக்கின்ற இடம்.
ஆக, எல்லாமுடையது தான் சத்திய ஞான சபை. ஆனால் இது அகத்தில் ஏற்படுகின்ற அனுபவம் என்கிறார் வள்ளலார்.
நம் உள்ளக்கோயில் தான் சத்திய ஞான சபை என அறிய வேண்டும்.
வள்ளலார் மார்க்கத்தின் கொள்கையை உறுதியாக சொல்லியிருக்கிறார், அது;
சுத்த சன்மார்க்கத்தின் உண்மை “ அக அனுபவமே”. ஆக, புறத்தில் கட்டப்பட்ட சத்திய ஞான சபை ஒரு அடையாளமே. எதனுடைய அடையாளம் எனில் அக அனுபவ உண்மையின் அடையாளம்.
சத்திய ஞான சபை குறித்த வள்ளலாரின் பாடல்கள் மற்றும் உபதேசம் காண்போம்.
உபதேசங்கள் :
ஆன்மிகத்தில் மனஅறிவு சபை ஜீவ அறிவு சபை ஆன்ம அறிவு சபை என மூன்று சொல்லப்படுகிறது. இங்கு சுத்த சன்மார்க்கத்தின் சபை ஆன்ம சபை ஆகும். புருவமத்தி சபை.
ஆன்மபிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் – இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன மென்றும் சொல்லுகின்றது.
சைவத்திலும் இந்த அக உண்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய சைவம் புறச் சமயமாக, மனித வடிவில் கடவுள்களாக மாறிவிட்டது . திருமூலர் சைவத்தின் மந்திரம் சிவாயநம சி என்பது எல்லாமுடையது, வா என்பது அருள், ய வென்பது ஆன்ம சிற்சபை, ந வென்பது சீவன், ம வென்பது பசு; என்கிறது சைவம்.
சுத்த சன்மார்க்கம் ஒன்றே மிக உறுதியாக அறிவித்தது யாதெனில்;
- அக அனுபவமே உண்மை.
- இறவாதமார்க்கமே லட்சியம்.
- அதற்கு கருணை ஒன்றே சாதனம்.
- கடவுளை தவிர அனைத்தும் தத்துவங்களே.
- தத்துவங்களில் லட்சியம் கூடாது.
- கடவுளின் உண்மை நிலை அறிவதே வழிபாடு.
ஆனால், உலக சமயங்களில் சில, அகத்தில் விளங்கும் இறை உண்மை நிலையை குறித்து வியம்பினாலும், புறத்திலே உள்ள தத்துவங்கள் மூலமும் இறைநிலையை தெரிந்துக்கொள்ள முயற்சித்தன. உடல் தத்துவங்களையும் வணங்கி வழிபாடுளையும் கண்டது. ஆனால் இந்த வழியாக உண்மையை முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியாது, முடியாமல் போய் விட்டது என்கிறார் வள்ளலார். தத்துவங்கள் மூலம் விசாரிக்க அதற்குரிய காலமும் நமக்கில்லை என்கிறார் வள்ளலார். மரணம் நெருங்கி வருகிறது என்கிறார்.
புறத் தத்துவங்களின் அடிப்பைடயில் சமய மதங்கள் பஞ்ச சபையை திருக்கோயிலாக கண்டது, கொண்டுள்ளது.
இதோ சமய கோயில்களின் அமைப்புகள் பார்ப்போம்.
பிருதிவி – நிலம் – பொற்சபை – திருவாதவூர்
அப்பு – நீர் – ரஜிதசபை – திருவானைக்காவல்
தேயு – நெருப்பு – தெய்வசபை – திருவண்ணாமலை
வாயு – நிருத்தசபை – திருக்காளத்தி
ஆகாயம் – சிற்சபை – சிதம்பரம்
இவை தவிர
சூரியன் இதை வணங்க சூரியனார் கோயில்
சந்திரனை வணங்க திங்களூர் கோயில் அமைத்தனர் சமயத்தில்.
எங்கும் பரவியுள்ள இறையொளி சொரூபத்தை நம்முள் உள்ளத்தில் அறிவில் கண்டு களிப்பதாக உள்ளது என்ற உண்மையை விளக்க எந்தொரு கோயிலும் கட்டப்படவில்லை.
வள்ளலார் வடலூரின் கட்டிய சத்திய ஞான சபையே அகத்திருக்கோயில். ஆம், தத்துவங்களை விட, மற்ற உயிர் பிறவிகளை விட, உண்மை உணரக்கூடிய உயர்ந்த அறிவைப் பெற்றுள்ள மனித தேகக்கோயில் தான் சத்திய ஞான சபை. ஆம் ஆன்ம சபைக்கான கோயில் என அறிக.
அகத்தில் இறைவன் வீற்றிருக்கும் உண்மையை கண்டவர்கள், அக்கடவுளின் உண்மை சொரூபத்தை பரிபூரணமாக கண்டு தரிசிக்காததினால், ஆன்மத் திருகோயில் கட்டுவதற்கு சமய தலைவர்களால் இயலவில்லை எனலாம்.
வள்ளலார் ஒருவரே தனது தனி வழியில் அக உண்மையை முழுமையாக கண்டார் இதை அவரே சொல்கிறார்கள். கண்ட அந்த உண்மையை உலகத்தார் எல்லோரும் தெரிந்துக் கொள்ளும் வண்ணம், இறைவனின் சம்மதம் பெற்று புறத்தில் கட்டியதே சத்திய ஞான சபை ஆகும்.
சத்திய ஞான சபை என்பது “ உண்மை செய்விக்கின்ற இடம் “. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் உண்மையை / இறை ஒளியை, அகத்தில்தான் நாம் தெரிந்து, அறிந்து அனுபவிப்பதாக உள்ளது என்பதை சொல்லும் இடமே சத்திய ஞான சபை. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அக அனுபவ உண்மையை நாம் தெரிந்துக்கொள்ளும் வரை சத்திய ஞான சபையை தரிசிக்க வாரீர் வாரீர் என அழைக்கிறார் வள்ளலார்.
இதை உறுதிப்படுத்தும் பாடல் வரிகள் காண்போம்;
சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். (உகப்பு: மேன்மை, உயர்வு)
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி (அகவல்)
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
மேற்படி பாடலில் சபை தனக்கு சொந்தமெனதாச்சு என்கிறார்.
பொது என்பது வேறு சொந்தம் என்பது வேறு. அப்படித் தானே. சத்திய ஞான சபையை அவருக்கு சொந்தம் என்றது எப்படி எனில், நாம் ஒவ்வொருவரும் சத்திய ஞான சபையை நம்முள் பெற்றுள்ளோம் என்பதே உண்மை. அவரவர் அவரவரின் சபையை காண வேண்டும். வள்ளலார் அவருள்ளே கண்ட ஞான சபை அவருக்கு சொந்தமானது தானே. நாமும் கண்டு சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும்.
கடவுள் நம் ஒவ்வொருள்ளும் உளத்தே தனித்திருந்து உள் உணர்த்த உணர்கின்றோம். அதற்கான பாடல் :
சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா.
அடுத்து, சத்திய ஞான சபையின் உண்மை யாருக்கு கை கூடுவதாக உள்ளது என்றால்; வள்ளலார் தெளிவாக சொல்வது;
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே….
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வை..
அடுத்து, யாருக்கும் சிறு கேடு விளைவிக்காத அறிவை பெற்றிருப்பவர்களுக்கு;
பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
அடுத்த பாடல்:
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் “என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்”
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவை”உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே”.
அன்பர்களே,
நம் உடலில் அகம் என்பது கழுத்துக்கு மேல் என்கிறார் வள்ளலார். நமது விசாரத்தை முகத்தில் வைக்க வேண்டும் என்கிறார். சத்திய ஞான சபை இதை கட்டிய காரணம்; அவர் கொண்டுள்ள ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையால் தான்.
அக வழிபாட்டு தனி நெறியை உலகத்துக்கு தெரிவிக்கும் பொருட்டு, சத்திய ஞான சபை திருக்கோயில்களை நாம் உலகமெங்கும், இப்பூமியில், அமைக்கச் சொல்லும் பாடல் வரிகள் இதோ:
“வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே”
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
அன்பர்களே,
சத்திய ஞான சபை முன்பு நாம் செய்ய வேண்டிய விண்ணப்பம்:
அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
அன்பர்களே,
மேலே சொன்னதை நாம் கருத்தில் கொண்டு வடலூர் வந்து, சத்திய ஞான சபை முன்பு நின்று,
“ஆண்டவரே, விரைந்து வந்து எனக்கு உண்மையை தெரிவிக்க வேணுமாய் கண்ணீர் வடித்து வேண்டி விண்ணப்பம் செய்வோம். “
அடுத்து, சத்திய ஞான சபையின் உள் அமைப்பின் உண்மை குறித்து காண்போம்.
நன்றி:
ஏபிஜே அருள் @ இளங்கோ 8778874134
Youtube : http://www.youtube.com/@Godandgraceorg