Deprecated: Hook custom_css_loaded is deprecated since version jetpack-13.5! Use WordPress Custom CSS instead. Jetpack no longer supports Custom CSS. Read the WordPress.org documentation to learn how to apply custom styles to your site: https://wordpress.org/documentation/article/styles-overview/#applying-custom-css in /var/www/wp-includes/functions.php on line 6078
சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
July 27, 2024
உபதேசக் குறிப்புகள்

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

 உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற  நண்பர்களே!

 அறிவு வந்த கால முதல்

  1. அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
  2. அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,
  3. கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும்,
  4. செய்து அறியாத அற்புச் செயல்களையும்,          
  5. கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்,
  6. அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,

இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி  இருக்கின்றேன்.நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

இயற்கையிற்றானே விளங்குகின்றவராயுள்ளவரென்றும், இயற்கையிற்றானேயுள்ளவராய்  விளங்குகின்ற வரென்றும்,

இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும்,

  • எல்லா  அண்டங்களையும்,
  • எல்லா உலகங்களையும்,
  • எல்லாப் பதங்களையும்,
  • எல்லாச்சத்திகளையும்,
  • எல்லாச்  சத்தர்களையும்,
  • எல்லாக் கலைகளையும்,
  • எல்லாப் பொருள்களையும்,
  • எல்லாத் தத்துவங்களையும்,
  • எல்லாத் தத்துவி களையும்,
  •  எல்லா உயிர்களையும்,
  • எல்லாச்செயல்களையும். 
  • எல்லா இச்சைகளையும்,
  • எல்லா ஞானங்களையும்,
  • எல்லாப் பயன்களையும்,
  • எல்லா அனுபவங்களையும்
  • மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்
  1. தோற்றுவித்தல்,
  2. வாழ்வித்தல்,
  3. குற்றம் நீக்குவித்தல்,
  4. பக்குவம் வருவித்தல்,
  5. விளக்கஞ்செய்வித்தல், முதலிய

பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,

எல்லாம் ஆனவரென்றும்,

ஒன்றும் அல்லாதவரென்றும், 

சர்வகாருணிய ரென்றும்,

சர்வவல்லபரென்றும்,

எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும் 

ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும்

சத்திய அறிவால்அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும்வண்ணங்க  எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு    விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்துஅழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்

பலவேறு  சமயங்களிலும்     

பல்வேறு மதங்களிலும்

பலவேறுமார்க்கங்களிலும்

பல வேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி  விரைந்து விரைந்து பல வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்.

 இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,

  • உண்மையறிவு,
  • உண்மையன்பு,
  • உண்மையிரக்கம் முதலிய

சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தைதயும்பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

 ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப்பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும்  அடைவீர்கள்.

unmai

Channai,Tamilnadu,India