April 26, 2024
tamil katturai APJ arul

“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

ஞாயிறு 01-04-2018

கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்

 அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் ::

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அனைவருக்கும் வணக்கம்,

இனிய மாலைப் பொழுது. ஞாயிறு தோறும் நடைப்பெறும் இந்த நல்ல விசாரணையில் இன்று விசாரம் செய்யும் சுற்று நான் பெற்றுள்ளேன்.பாக்கியம். நம் மார்க்கத்தில் நல்ல விசாரமே பயிற்சி, உண்மை அன்பால் கண்ணீர் விடுதலே சாதனம். இதுவே வள்ளலாரின் தனி வழி.

ஆம், இன்று விசாரம் ” தனி ” என்ற வார்த்தை குறித்தே.

முதலில் ஒன்றை நாம் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

நாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை நம்பிக்கை கொண்டு சார்ந்து, அதன் தனி நெறியை மட்டுமே கருத்தில் கருதி, திருவருள் பெறும் நன்முயற்சியில் உள்ளவர்கள்.

வள்ளலார் வழி என்றால் அது வள்ளலாரின் சத்திய வார்த்தை பாதை. வள்ளலார் தான் தெரிவிக்கிறார்;     “ என் நெறி தனி நெறி” என்று. அதனால், உடனே நாம் கருத்தில் கொள்கிறோம் சுத்த சன்மார்க்க நெறி ஒரு தனி நெறி என்று.  நிற்க! சுத்த சன்மார்க்க நெறியை வள்ளலாரால் எங்ஙனம் தனி நெறி எனச் சொல்லப்பட்டது என்ற விசாரத்திற்கு உரிமை உண்டு. அதுவே நல்ல விசாரணை.

தனி என்ற வார்த்தையின் பொருள், மற்றவற்றிலிருந்து வேறுபட்டு, தனித்து உள்ளது என்று பொருள் என நமக்கு நம் அறிவில் படும். ஆனால் அப்படியல்ல.

தனி என்ற வார்த்தை வள்ளலாரால் சொல்லப்பட்ட சத்திய வார்த்தை. அதனால் முதலில் நம் அறிவில் அது சரியானது தான் என்ற கருத்து ஏற்பட வேண்டும். அதுவே நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் தான் “தனி” என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையின் உண்மைப் பொருள் நம் நெறி மூலமே அறிவினில் விரிகிறது. இது சத்தியம். இங்ஙனம் உண்மை வெளிப்படவில்லை என்றால் நம் மார்க்கப் பயிற்சியாகிய நல்ல விசாரத்தில் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும். இதுவே ஆண்டவரின் கருணை. உண்மை அறிய நமக்கு வேண்டியது நம்பிக்கையும் நன்முயற்சியும்.

ஆம், நல்ல விசாரம் செய்வோம்.

திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தனது பாடல்களில் (எண்கள்: 136 & 813) தனி நெறி என குறிப்பிட்டுள்ளார்கள்.இதோ;

ஆறாம் திருமுறை பாடல் எண் 136 /

 திருவருள் விழைதல்     

தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் 

தனிநெறி உலகெலாம் தழைப்பக்

கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்

புண்ணியம் பொற்புற வயங்க

அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

ஆறாம் திருமுறை பாடல் 813 / 

பொதுநடம் புரிகின்ற பொருள்

சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே பொதுநடம் புரிகின்ற பொருளே.

அகராதியின் படி ”தனி” என்ற வார்த்தையின் உண்மை பொருள் என்னவென்றால்; ஒற்றை (singleness); ஏகாந்தம் (solitude); ஒப்பின்மை (Uniquence) என்கிறது

நம் வள்ளலார் தனது பாடல்களில், விண்ணப்பங்களில்,உபதேசத்தில்; உண்மை கடவுள் ”பெருங்கருணை” திறத்தை சொல்லும் போது ஒன்றொனும் ஒன்றாகிய, ஏகரென்றும், ஓப்புயர் வின்றி என்கிறார்கள்.

தன் மார்க்கத்தில் வெளிப்படும்பதியை தனிப்பதி என்றும், தான் கண்ட அருட்பெருஞ்ஜோதியை தனி அருட்பெருஞ்ஜோதி என்றும், தான் கண்ட நடராஜரை தனி நடராஜர் என்றும், தான் பெற்ற அமுதம் தனி அமுதம் என்றும், தனக்கு வெளிப்பட்ட வெளி தனிவெளி என்றும், தான் சொல்லும் தெய்வம் தனித்தெய்வம் என்றும், தான் குறிப்பிடும் சிவம் தனிச்சிவம் என்றும், தான் தரிசித்த சோதி தனிச்சோதி என்றும், தான் பெற்ற வடிவம் தனி வடிவம் என்றும், தனக்கு கிடைத்த அருள் தனி அருள் என்றும் இங்ஙனம் பல தனி உண்மைகளை நமக்கு பாடல்கள் மூலம் சொல்லியுள்ளார்கள். எதற்காக? வள்ளலார் குறிப்பிடும் சிவம், ஜோதி, வெளி, நடராஜர், அருள், நிலை முதலிய இவை ஏற்கனவே சமய,மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ளதே என்பவர்களும் உண்டு. அதை மறுக்கும் அடிப்படையிலும், மேலும் தனி என்ற சொல்லின் தனி மேன்மைப் பொருளிலும் வள்ளலார் இந்த தனி என்ற சத்தியச் சொல்லை பயன்படுத்தி, நமக்கு உண்மையை தெரியப்படுத்தி உள்ளார்கள்.

தனி நெறி என்பது மற்ற நெறியுடன் ஒப்புயர் இன்றி விளங்கும் நெறி என்றும், ஒன்றெனும் ஒன்றாகிய ஏகராகிய கடவுளை வெளிப்படுத்தும் மார்க்கம் என்றும் பொருள் படும்.

வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க தனி நெறி எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார். சமய,மத அனுபவங்களை கடந்தது.பக்கம் 404: இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் தெளிவாக சொல்கிறார்கள் மார்க்கங்கள் மூன்று வகைப்படும். பக்கம்: 406

1.சமய சன்மார்க்கம், 2. மத சன்மார்க்கம், 3. சுத்த சன்மார்க்கம்.

இந்த சுத்த சன்மார்க்கம் திருவருள் சம்மதத்தால் 19ம் நூற்றாண்டில் வள்ளலாரால் வெளிப்படுத்திய மார்க்கம். அதனால் இது நமக்கு புதிய மார்க்கம்.

இனி சொல்வோம் வள்ளலார் கண்ட உண்மை பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கம் 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய மார்க்கம் – தனி நெறி. உலகத்தார்களிடம் இந்த நெறி விரைந்து வெளிப்பட நன்முயற்சி செய்வோம். தனி நெறியின் பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை பெறுவதற்கு அதி தீவிர விருப்ப முயற்சி கொள்வோம்.

நன்றி அன்புடன் ; ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

( ஏபிஜெ அருள் எழுதி வெளி வந்துள்ள புதிய நூல் “ வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் ” பெற்று தனி நெறியின் உண்மையை உள்ளது உள்ளபடி தெரிந்துக் கொள்வோம். தபாலில் பெறுவதற்கு :

 9884265254 – ரவி / 863743 6345 – சசாங்கன்

விரைவில் …..

விரிவாக …

“திருவருட் பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் – தனி நெறி” 

– ஆய்வு நூல் — ஏபிஜெ அருள் –

நன்றி : வள்ளுவர் – வள்ளலார் மன்றம் )

Karunai Sabai-Salai

34, Poombuhar Nagar North Extn.,
Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

unmai

Channai,Tamilnadu,India

One thought on ““தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

  • Kathirvelu

    அருமை அற்புதம் சரியான புரிதலுடன் விளக்கம் தந்துள்ளதற்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

Comments are closed.