April 25, 2024
Uncategorized

எங்ஙனம்? எதற்கு? (பகுதி: 2)

எங்ஙனம்? எதற்கு? (பகுதி: 2) – ஏபிஜெ. அருள்.

“தனி நெறி” என அறிவிக்க வேண்டும். எங்ஙனம்? எதற்கு?
எதற்கு நம் வள்ளலார் மார்க்கம் புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டும்?
நம் வள்ளலார்க்கு முன்பு இருந்த சன்மார்க்கங்கள் இரண்டு
1.சமய சன்மார்க்கம்
2.மத சன்மார்க்கம்.
3வது புதிய மார்க்கத்தை நம் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கிறார். மேற்படியாக சன்மார்க்கங்கள் மூன்று என்கிறார் வள்ளலார்.
இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்றியுள்ளதை உலகிற்கு விரைந்து வெளிப்பட செய்ய வேண்டும் என ஆன்ம நேயம் கொள்ளுதலும் நம் தகுதியில் ஒன்றே. இதை விரைந்து வெளிப்படுத்தும் திறனை கொண்டது அரசுகளே. அரசு நம் மார்க்கத்தை ஒரு புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்தால் நமக்கு பல சட்டப் பலன்களும் உதாரணமாக சான்றிதழில் நாம் “சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர் என்று போட அனுமதியும், இதன் மூலம் உலகில் அனைத்து நாட்டவர்க்கும் நமக்கு தெரிந்த உண்மை பொது நெறி விரைந்து வெளிப்பட்டும், நம் வடலூர் நிலையங்கள் அரசின் கீழ் ஒரு சிறப்பு பார்வையிலும், நியமிக்கப்படும் அறங்காவலர்கள் நம்மவர்களாகவும் நியமிக்கப்படுவர். நம் நிலைய வருமானத்தை நம் தனி கொள்கை, நிலைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். நிலையத்தில் முரணான வகையில் சமயமத சடங்குகள் நடக்காது. நிற்க, நிலையம் வள்ளலாரின் சுத்தசன்மார்க்க நெறிப்படி நடக்க வேண்டும் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த 12 வருடங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் சத்திய ஞானசபை வழக்கு நிலுவையில் தான் உள்ளது. அந்த வழக்கில் வள்ளலார் சமயத்தை கைவிடவில்லை எனவும், அவர் பூசாரிகளிடம் லிங்க விக்கிரகத்தை கொடுத்து ஞானசபையில் வைத்து வழிபடச் சொன்னார் என்பதே எதிர்தரப்பு வாதம். இப்படிப்பட்ட முரண்பட்ட விசயங்கள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும் அவர்தம் நெறி தனி நெறி எனவும் சட்டப்படி அரசு முடிவு செய்ய வேண்டும். மாநில அரசவைக்கு அதிகாரம் உள்ளது என்று நாம் ஒரு உதாரணத்திற்காக கர்நாடகா அரசு லிங்காயத்தை தனி மதம் என அறிவித்ததை எடுத்துச் சொல்லப்பட்டது. அரசு செய்யாத பட்சத்தில், மேதகு நீதிமன்றம் நாடுவோம். ஆக, சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கும் பல பயன்களும், மகிழ்ச்சியும், இம்மார்க்கத்தை விரைந்து அறிந்திடஉலகத்தார்க்கும் பயன் கிடைக்கும்.
நேரத்தை வீணடிக்காமல் விசாரம் செய்வோம்.
நெறி என்றால் கொள்கை, கோட்பாடு எனப்படும். வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எந்த சமய மதக் கோட்பாட்டை சொல்கிறது என்றால், இம்மார்க்கம் தனி நெறி, கொள்கையை சொல்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி கடந்து தனி நெறியாக உள்ளது.
வள்ளலார் மிக அதிகளவில் பயன்படுத்திய வார்த்தையில் ஒன்றுதான் “தனி” என்ற சொல்.
இம்மார்க்கத்தில் செல்லப்பட்டுள்ள சத்திய வார்த்தைகள் அனைத்தும் தனித் தன்மை, தனிப்பொருள் கொண்டது. உ. ம்:
தனி அறிவு, தனி இயற்கை, தனி அனுபவம், தனி அருட்பெருஞ்ஜோதி, தனிக்கருத்து, தனி வெளி, தனிச்சுடர்,
தனி நடராஜர், தனிப்பெருங்கருணை,
தனி அருள், தனி ஞானசபை, தனிவடிவம், தனிச்சோதி, தனிநடம், இதை போல் நூற்றுக் கணக்கான “தனி” யுடன் கூடிய வார்த்தைகளை காணலாம். ஆக, வள்ளலார் சொல்லிய கொள்கை, நெறி தனித்தன்மை கொண்டதும் அதே நேரத்தில் என் நெறி எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது என்கிறார் வள்ளலார் . இங்ஙனம் ஒரு தனிப்பெயரை தன் மார்க்கத்திற்கு கொடுப்பது மூலம் வள்ளலாரின் மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் ஆகும்.
தன் நெறி “தனி நெறி” எனத் தெளிவாக கீழ்வருமாறு பாடல்கள் மூலம் அறிவிக்கிறார் வள்ளலார்.
#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக்கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்புண்ணியம் பொற்புற வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்

சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.

தன் மார்க்கம் “தனி” என்பதற்கு பாடல்:

ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

இந்த தனி நெறியில், தனிப் பதி,
புதிய மற்றும் பொது வழி, தனிப்பெரும்பயன் உள்ளது.
#நாம் இத்தனி நெறியில் கருணை நன்முயற்சியில் இடைவிடாது பயில்வோம்.
# மற்றவர்களுக்கு இவ்வுண்மையை எடுத்துரைப்போம்.
# புதிய மார்க்கம் மற்றும் தனி நெறி எனவும் மத்திய அரசு விளம்புகை செய்ய மாநில அரசை பரிந்துரைக்க வேண்டுமாம்.
# இதன் மூலம் இனி நாம் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவரென்று அரசிடம் பதிவு செய்வோம்.
#வள்ளலார் கட்டளைப்படி சாகாகல்வி கற்க தீவிர விருப்பம் கொள்வோம்.

நன்றியுடன் : ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India