March 19, 2024
Uncategorized

பதி விளக்கம் 

பதி விளக்கம் 

  1. அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்

பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்

இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்

சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

 

  1. வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி

எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்

அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்

திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

 

  1. சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி

நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்

பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்

சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

 

  1. இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்

தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்

நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்

திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

 

  1. எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்

எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்

சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்

துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த

வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்

மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

 

  1. அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்

மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்

துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்

உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே

கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்

கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்

ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான

ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்

நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்

ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்

பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்

விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்

உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்

பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ

டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த

ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்

புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி

மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி

உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

 

  1. ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்

என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

unmai

Channai,Tamilnadu,India